கொடைக்கானலில் மரங்கள் சாய்ந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கஜா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்தது. பத்து மணிக்கு மேல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பெருமாள் மலை, பிஎல்.செட், மச்சூர், வடகரைபாறை, வாழைகிரி உள்ளிட்ட பல இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அவற்றை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். அண்ணாசாலை, அட்டக்கடி, ஏரிச்சாலை போன்ற இடங்களில் மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் பல இடங்களிலும் மின்தடை ஏற்பட்டது.
கீழ்மலையில் பல இடங்களிலும் பலத்த காற்றின் காரணமாக வீடுகளின் மேல் இருந்த தகர கூரைகள் பறந்தன. பல இடங்களிலும் சாய்ந்த பெரிய மரங்களை அப்புறப்படுத்த முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை காரணமாக விவசாய பயிர்களான அவக்கோடா, பட்டர்புரூட், மலைவாழை ஆகியன சேதமாகின.