நத்தம் அருகே பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து உயிரிந்ததில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கல்வேலிபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் சிவரஞ்சனி (16). நத்தத்திலுள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கல்வேலிப்பட்டி பகுதியில் தனியார் தோட்டத்திலுள்ள கிணற்றில் சிவரஞ்சனி வியாழக்கிழமை விழுந்துவிட்டார்.
இது குறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிவரஞ்சனி உயிரிழந்துவிட்டார்.
இதனிடையே, சிவரஞ்சனியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதில் தொடர்புடைய இளைஞரை கைது செய்யவேண்டும் என்றும், நத்தம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், சிவரஞ்சனியின் உடலை நத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய மறுப்பதாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, நத்தம்- திண்டுக்கல் சாலையில் அரசு மருத்துவமனை முன்பாக சிவரஞ்சனியின் உறவினர்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும், பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கமிட்டனர்.
இதனிடையே மாற்று மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மறியலில் ஈடுபட்டவர்களுடன், வட்டாட்சியர் ஜான்பாஸ்டின், காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நத்தம்- திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.