திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.61.72 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் சமுதாய வளைகாப்பு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் சி. சீனிவாசன், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நிகழாண்டில் 2,520 கர்ப்பிணிகளுக்கு ரூ. 6.30 லட்சம் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், புதிய மேல்நிலைத் தொட்டி கட்டுதல், குடிநீர் வழங்கல், தடுப்பணை கட்டுதல், புதிய தார் சாலை அமைத்தல் என பல்வேறு திட்டங்களின் கீழ் 8,836 பணிகள் ரூ.61.72 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொதுமக்களின் குறைகளை, திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் மனு மூலம் தெரிவித்தால், அதனை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து, 1,452 பயனாளிகளுக்கு ரூ.1.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.