தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2018-19 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் போட்டிகள், அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகின்றன.
மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும் இப்போட்டிகளில், மாணவ மாணவிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பங்கேற்கலாம். இளநிலை பிரிவு(மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) மற்றும் முதுநிலைப் பிரிவு (6 முதல் 12ஆம் வகுப்பு வரை) என 2 பிரிவுகளில் போட்டி நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.sdat.tn.gov. in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியிலும், 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.