ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூர் காலனியைச் சேர்ந்தவர்கள் குழந்தைவேல் (40), ஆறுமுகம் (50), மாரிமுத்து (28). கூலி தொழிலாளர்களான இவர்கள் மூவரும் திங்கள்கிழமை ஒரு இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலை வெரியப்பூர் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். குழந்தைவேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.