திருச்சியில் அக்.6 ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி சார்பில் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. பட்டியல் பிரிவில்ஆறு பெயர்களில் அழைக்கப்படும் ஒரே சாதியினரை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிடவும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கவும் வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறும்.
மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்கள் தொலைநோக்கு திட்டங்களாகும். அவை ஆரம்பத்தில் மக்களை கஷ்டப்படுத்துவது போல் தெரிந்தாலும் பிறகு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பு கடுமையான விலையேற்றத்துடன் இருந்த துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு பிறகு மிகவும் குறைந்துள்ளதே இதற்கு உதாரணம். அதே வேளை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் முனியப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.