பழனியை அடுத்த தும்பலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்ட திமுகவினர் 11 பேரும் வெற்றி பெற்றனர்.
தும்பலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 11 உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த செப்.1 ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்றவர்கள் பெயரை அறிவிக்காமல் தேர்தல் அலுவலர் சென்றுவிட்ட நிலையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவை வெளியிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அதனடிப்படையில் திங்கள்கிழமை மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. விடியோ கேமராக்கள் கொண்டு வாக்கு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. டிஎஸ்பி., விவேகானந்தன், வட்டாட்சியர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கையின் போது உடனிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிவில் தேர்தலில் போட்டியிட்ட திமுக உறுப்பினர்களான ஈஸ்வரி, முத்துமணி, செடிப்பவுன், குமரேசன், பூர்ணவேல், பழனிச்சாமி, ராமசாமி,செல்லமுத்து, செந்தமிழன், தண்டபாணி உள்ளிட்ட 11 பேரும் வெற்றி பெற்றனர்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்தனர். இதையடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற திமுகவினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன் தலைமையில் பழனி-தாராபுரம் சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.