ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முதலாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஐ.சி.ஜி.வி.9114 என்ற புதிய நிலக்கடலை ரகத்துக்காக விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக, வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகே அரசரடி வண்டல் கிராமத்தில் விவசாயி கோபாலின் நிலக்கடலை விதைப் பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர், வேளாண்மை இணை இயக்குநர் அரிவாசன் கூறியது:
நிலக்கடலை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரித்திட, அரசு பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி மானியமாக கிலோவுக்கு ரூ. 10, விநியோக மானியமாக ரூ. 25 என வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 51 ஹெக்டேர் பரப்பளவில் நிலக்கடலை விதைப் பண்ணைகள் அமைத்து, 72 மெட்ரிக் டன் சான்று பெற்ற நிலக்கடலை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விதைப் பண்ணைக்கு தேவையான ஆதார விதைகள் கொள்முதல் செய்யும் பணிகள் வேளாண்மைத் துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுவாக திண்டிவனம்-7 ரக நிலக்கடலையே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, அதிக எண்ணெய் சதவிகிதம் கொண்ட திண்டிவனம் 13, காதிரி 6, ஐ.சி.ஜி.வி.9114 போன்ற புதிய ரகங்களில் விதைப் பண்ணைகள் அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான சான்று விதைகளை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஹைதராபாதில் இயங்கும் மானாவாரி பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஐ.சி.ஜி.வி 9114 என்ற புதிய நிலக்கடலை ரகத்துக்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கடலையில் பொக்குகள் இன்றி நன்கு வளர்ச்சியடைந்த முழுமையான பருப்புகளை பெற ஊட்டச்சத்து கலவை அவசியமாகும் என்றார்.
பேட்டியின்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, விதைச் சான்று உதவி இயக்குநர் எஸ்.எஸ். ஷேக் அப்துல்லா உள்ளிட்ட பல அதிகாரிகளும் உடனிருந்தனர்.