திருவாடானை வட்டார விவசாயிகள், அதிக பூச்சித் தாக்குதலுக்குள்ளான டீலக்ஸ் பொன்னி நெல் ரகத்தை நடப்பு சம்பா பருவத்துக்கு பயன்படுத்த வேண்டாம் என, வேளாண் உதவி இயக்குநர் கெர்சோன் தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாடானை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. திருவாடானை வட்டார விவசாயகள் நலன் கருதியும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையிலும், அரசு பல்வேறு மானியத் திட்டங்களை வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த டீலக்ஸ் பொன்னி நெல் ரகத்தில் குலை நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், அரசு மானியம் வழங்க இயலாது.
எனவே, என்எல்ஆர் 5204, ஏடிடி(ஆர்) 49, சிஓ(ஆர்) 50 போன்ற இதர நெல் ரகங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் விரிவாக்க மையத்தில் போதுமான இருப்பும் வைக்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன் படுத்திக் கொள்ளுமாறு, வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.