பரமக்குடியில் குருவிக்கார இன மக்கள் மீது திருட்டு பழி சுமத்தி காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தாலம்மன் கோவில் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகர், ஒன்றிய செயலாளர் தி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சிவாஜி, எஸ்.பசலை நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.லாசர் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அப்பாவி குருவிக்கார இன மக்களை திருடர்களாக சித்தரித்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து சித்தரவதை செய்வதாகவும்,
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி தாலுகா காவல் நிலையத்தில் 3 அப்பாவி இளைஞர்களைத் தாக்கியதாகவும் குற்றம்சாட்டினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தவும் இதில் வலியுறுத்தப்பட்டது.