ராமேசுவரம் அருகே மீனவரை தாக்கிய வனத்துறையினரைக் கண்டித்து திங்கள்கிழமை கடலோர காவல்நிலையத்தை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி வடக்கு கடற்கரைப் பகுதியில் மீனவர் அப்துல்வாஹித் சங்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்குவந்த வனத்துறை ரேஞ்சர் சதீஸ் தலைமையிலான வனத்துறையினர் அவர் மீது தாக்குதல் நடத்தினராம். இதில் காயமுற்ற அப்துல்வாஹித் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய வனத்துறை ரேஞ்சரை பதவி நீக்கம் செய்யக் கோரியும்,ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகார்மீது வழக்குப் பதிவு செய்யாததைக் கண்டித்தும் மண்டபம் கடலோரக் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இயக்கத்தினர் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.