கீழக்கரையில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு துரோணாச்சாரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
கீழக்கரை சுழற் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாலிடெக்னிக் முதல்வர் அ.அலாவுதீன் தலைமை வகித்தார். சுழற் சங்க முன்னாள் தலைவர் எம்.முஹம்மது சுஹைல், சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெ.தினேஷ்பாபு, நானா என்ற நாகரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் சுழற் சங்கத் தலைவர் எம்.வீரபூபதி சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்தார். கீழக்கரை சுழற் சங்கத் தலைவராக ஏ.ஆர்.முகம்மது முஸ்தபா, செயலாளராக சேகுசகாபுதீன் சைபுல்லா ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுவினர் பதவியேற்றுக் கொண்டார்.
இதில், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் சிறப்பாக பணியாற்றியதற்காக அக்கல்லூரியின் துணை முதல்வர் அ.ஷேக்தாவூத், கணித முதுநிலை விரிவுரையாளர் எம்.உமையாள், கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர். அன்பர்நிஷா பேகம், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.ஆறுமுகம், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செய்யது அலி பாத்திமா ஆகியோருக்கு துரோணாச்சாரியர் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ரோட்டரி சங்க துணை ஆளுநர் ஆர்.விஜயகுமார் வழங்கி பாராட்டிப் பேசினார். சுழற் சங்க துணை ஆளுநர் ஆர்.விஜயகுமார் வரவேற்றார். செயலாளர் ஜெ.சேகுசகாபுதீன் நன்றி கூறினார்.