கமுதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தொடக்கி வைத்தார்.
கோட்டைமேடு, அரசு தொடக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, ரஹ்மானியா கார்டன் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோட்டைமேடு, ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், ஆயுதப்படை போலீஸார் குடியிருப்பு, கமுதி - மதுரை, கமுதி - முதுகுளத்தூர் சாலை, நேதாஜி பஜார், சுபாஷ் நகர், நீதிமன்ற வளாகம், பாண்டியன் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணி சென்றது.
பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் பதாகைளை ஏந்தி, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியவாறு பேரணியில் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கமுதி வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலர் வெங்கடேசன், முழு சுகாதார முனைப்பு இயக்க கமுதி வட்டார அமைப்பாளர் சாந்தி, மண்டல அலுவலர்கள் சந்திரசேகரன், இளங்கோவன், பணிமேற்பார்வையாளர் ராமர், நாராயணபுரம் ஊராட்சி செயலாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியர் அருள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.