இலங்கையில் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றபோது, இரு விசைப்படகுகளுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்கள் 10 பேருக்கும் தொடர்ந்து காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நான்காவது முறையாக புதன்கிழமை மீண்டும் 10 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அலெக்ஸ்ராஜா கிரேசின் விசாரணைக்கு பின், டிசம்பர் 12 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.