மனைவி தீக்குளித்து தற்கொலை:  கணவர், மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை  கொடுமைப்படுத்தி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கும் மாமியாருக்கும்

மனைவியை  கொடுமைப்படுத்தி தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள தெய்வதானம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி(21). இவருக்கும் முத்துராமலிங்கம்(32) என்பவருக்கும் கடந்த 29.6.2011 ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாள்களில் கணவர் முத்துராமலிங்கம் வெளிநாட்டுக்கு பணி செய்ய சென்று விட்டார். வீட்டில் இருந்த மருமகள் சாமுண்டீஸ்வரியை மாமியார் ஆறுமுகம் தரக்குறைவாக பேசியும், பல்வேறு குறைகளைக் கூறியும் கொடுமைப்படுத்தி உள்ளார்.மேலும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கணவரும் 
கொடுமைப் படுத்தினாராம். 
இதனால் மனம் உடைந்த சாமுண்டீஸ்வரி தனது தாயார் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில்  அவரை சமாதானம் செய்து 2.4.2013 ஆம் தேதி வீட்டுக்கு அழைத்து வந்த பின்பும் கணவரும்  மாமியாரும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 4.4.2013 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 
 இச்சம்பவம் தொடர்பாக சிக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துராமலிங்கத்தையும்,மாமியார் ஆறுமுகத்தையும் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியுமான ஏ.கயல்விழி,  ஆறுமுகத்துக்கும், கணவர் முத்துராமலிங்கத்துக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 
மேலும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு  ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com