முதுகுளத்தூரில் வணிகர்கள், தொழிலாளர்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக ரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும் என, வர்த்தக சங்கத்தினர் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூரில் வாரச் சந்தை நாளான வியாழக்கிழமை, சுற்றுக் கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், முதுகுளத்தூர் பேருந்து நிலையம், பஜார்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதையறிந்து, திருட்டுக் கும்பல் பொதுமக்களிடமிருந்து நகை, பணம், பொருள்களை திருடிச் செல்கின்றன. இதன் காரணமாக, கிராம மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், திருட்டுக் கும்பல்களின் அட்டகாசம் குறைந்தபாடில்லை. முதுகுளத்தூர்பேருந்து நிலையத்தில் மட்டும் ஒரேயொரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே, திருட்டை தடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கூடுதலாக கேமராக்கள் பொருத்த வேண்டும் என, வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.