கடலாடி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்திய மாணவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அரசு கலைக் கல்லூரியில் ஆப்பனூரைச் சேர்ந்த முருகானந்தம் மகன் முனீஸ்வரன் (20) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சேர்மநாதன் மகன் விஜயக்குமார் (19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் இவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜயக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனீஸ்வரன் கையில் குத்தியதில், அவர் காயமடைந்தார். உடனே, அவரை கடலாடி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து கடலாடி காவல் நிலையத்தில் முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மாணவர் விஜயக்குமாரை கைது செய்தனர்.