திருவாடானை அருகே நம்புதாளையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான பொருள்களை கிராம மக்கள் சீர்வரிசை போன்று ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு கிராம பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை கொடுக்கும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். தொடக்க கல்வி அலுவலர் வசந்த பாரதி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் ஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் யூசுப் வரவேற்றுப் பேசினார்.
முன்னதாக கிராம பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள், பென்சில், பேனா உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசை ஊர்வலம் போல மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் மற்றும் ஆசிரியர்கள் கிராம மக்களை வரவேற்று சிறப்பு விருந்து அளித்தனர். ஆசிரியர் ரவி நன்றி தெரிவித்தார்.