கமுதியில் உள்ள முகமது இப்ராகிம் கருனையானந்தா ஞான பூபதிகள் தர்ஹாவில் ஞாயிற்றுக்கிழமை இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து சந்தனம் பூசி சும் விழா நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேட்டில் மகான் முகமது இப்ராஹிம் ஷா தர்ஹா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடி முதல் நாளில் சந்தனம் பூசும் திருவிழா நடைபெறும். இதில் இந்துக்களும், முஸ்லிம்களும் தத்தமது மத வழிபாட்டு முறைகளின்படி விழா கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை 78-ஆம் ஆண்டு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்க, திருவாரூர், பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, அபிராமம், பெருநாழி, கோட்டைமேடு, பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மதத்தை சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
இந்து மதத்தினர் சார்பில் குருக்களை வைத்து மந்திரங்கள் முழங்க, தேங்காய், சூடன், சாம்பிராணி, விபூதி, ஊது பத்தி, நெய் விளக்கு ஏற்றி பூஜைகள், வாழைப்பழம், பூ, மாலைகளுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் முஸ்லிம்கள் அவர்கள் மத முறைப்படி வழிபட்டனர்.
அனைத்து மத பக்தர்களுக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பிரியாணி உள்ளிட்ட ஐந்து வகையான சைவ உணவு, சர்க்கரை, லட்டு, பேரிச்சம் பழம், பத்தி, மல்லிகைபூ, ஆகியனவும் வழங்கப்பட்டன. இது குறித்து கோட்டைமேட்டைச் சேர்ந்த சிவலிங்கம் கூறுகையில், இந்துக்களும் முஸ்லிம்களும் அவரவர் மத முறைப்படி ஒரே இடத்தில் வழிபாடு நடத்துவது இங்கு மட்டுமே உள்ளது.
இந்தத் திருவிழாவில் பங்கேற்பதன் மூலம் எங்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருகிறது என்றார்.