எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராமேசுவரம், மண்டபம், பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 1,300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்களில், தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த அருமைநாதன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், ராமேசுவரம் அருகே மண்டபம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32), எவிரோன் (18), ராஜபாலன் (50), நவநீதன் (45) மற்றும் ரஞ்சன் (40) ஆகிய 5 பேர் மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் 5 பேரும், தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், இவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கைது செய்தனர். பின்னர், இலங்கையில் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதையடுத்து, அந்நாட்டு ஊர்க்காவல் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையை அடுத்து, ராமேசுவரம் மீனவர்கள் 5 பேருக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறைக் காவல் விதிக்கப்பட்டது. பின்னர், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.