கடலாடி பகுதியில் கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் புதன்கிழமை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த முருகேசன் மகள் கார்த்திகா(20).இவர் கடலாடி அரசு கலை கல்லூரியில் நடப்பு ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். இதனால் ஜூன் மாதம் 14-ஆம் தேதி பெற்றோர்களிடம் கல்லூரிக்கு சென்று படித்து முடித்ததற்கான சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு வருவதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வீடு வரவில்லை. இதனால் சாயல்குடி காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடி அருகே காவாகுளத்தைச் சேர்ந்த பொன்னையா மகள் கலைமேகலா(21). ராமநாதபுரம் தனியார் கல்லூரிக்கு ஜூன் 19- ஆம் தேதி படிக்கச் சென்றவர் இன்னும் வீடு திரும்ப வில்லை. இதனால் பெற்றோர்கள் மாணவியின் உறவினர் மற்றும் உடன் பயிலும் மாணவிகளிடம் விசாரித்தபோது கடந்த ஒரு வாரமாக மாணவி கலைமேகலா கல்லூரிக்கு வரவில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனால் மேலச்செல்வனூர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை பொன்னையா கொடுத்த புகாரின் பேரில் கடலாடி ஆய்வாளர் (பொ)முத்துராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.