ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே தம்பியின் காதல் திருமணத்துக்கு ஆதரவு அளித்த அண்ணனை தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சத்திரக்குடி தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் சரவணன்(25). இவரது தம்பி விஜய் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்திரக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாலமுருகனின் உறவினரான நித்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்திற்கு உதவியதாக விஜயின் அண்ணன் சரவணன் மீது பாலமுருகனுக்கு பகை இருந்துள்ளது.
இந்நிலையில் சம்பவநாளன்று சத்திரக்குடி சேமனூர் சாலையில் சரவணன் நடந்து வந்துகொண்டிருந்தபோது குடிபோதையிலிருந்த பாலமுருகன் சரவணனை தாக்கினாராம். இதில் பலத்த காயமுற்ற அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனர்.