ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் புதன்கிழமை உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பசும்பொன் ஸ்ரீயோகீஸ்வரர் உ.முத்துராமலிங்க பிர்மேந்திரர் கர்த்தா யோகா மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பசும்பொன் தேவர் நினைவாலய அறக்கட்டளை தலைவர் த.காந்திமீனாள் தலைமை வகித்தார். யோகா மைய பொறுப்பாளர் வே.மயில் மணிப்பாண்டியன், ,பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரி முதல்வர் ஆர்.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்சியில் மதுரை மகாமுனி சுவாமி, பார்வர்ட் பிளாக் மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பசும்பொன் தேவர் நூற்றாண்டு விழா அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், உயர்நீதிமன்ற மதுரைகிளையின் மத்திய அரசு வழக்குரைஞர் பி.இளையரசு, பேராசிரியர் ரா.தேவதாஸ் உள்ளிட்டோர் சிபு விருந்தினராகக் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரா.சிவராமகிருஷ்ணக்குமார் மற்றும் சர்வசிக்ஷ அபியான் அமைப்பின் வட்டார இயக்குநர் சாமூண்டீஸ்வரன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
சிவானந்த சேவாஸ்ரமம் பதிப்பாசிரியர் மற்றும் இமயகீதம் மாதஇதழ் அறங்காவலர் டி.கே. சேஷன் ஆகியோர் நல்லிணக்க ஆசியுரையாற்றினார். சர்வதேச யோகப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற கல்லூரி மாணவி காமாட்சி கெளரவிக்கப்பட்டார்.
கமுதி மற்றும் கமுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ந.பூமயில் வரவேற்றார். நிகழ்சி முடிவில் மு.வெள்ளைபாண்டியன் நன்றி கூறினார்.