கமுதி மற்றும் முதுகுளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை சூறைக் காற்றுடன் கோடை மழை பெய்தது. இதனால் விவசாயிகள் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைகள் முறையாக காலத்திற்குள் பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
கமுதி பகுதியில் விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் வறட்சி நிவாரணத் தொகை பெறக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், கமுதி, கோட்டைமேடு, பசும்பொன், உலகநடை, சேகநாதபுரம், கருங்குளம், பேரையூர், கோவிலாங்குளம், புதுக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு திடீர் என இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்த மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
இதனால் தற்போது விளைநிலங்கள், வயல்கள், குளம், கண்மாய், ஏரிகள், கால்வாய்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகள் கோடை உழவுப் பணிகளை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் திங்கள்கிழமை பகலில் மழை பெய்தது. இந்த மழையால் பருத்தி, மிளகாய், சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மழை காரணமாக பேருந்து நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கி நின்றது.