முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தில் 2 சிறுமிகள் இறக்க காரணமாக இருந்த குழியை புதன்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் மூடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பூக்குளம் கிராமத்தைச்சேர்ந்த வெள்ளிமலை மகள் அனுஷ்யா(8). அதே ஊரைச்சேர்ந்த மலைமேகம் மகன் வர்ஷிகா(6). இவர்கள் இருவரும் அண்மையில் அதே கிராமத்தில் பஞ்சவர்ணம் என்பவர் வீடு கட்ட தண்ணீர் தேக்குவதற்காக தோண்டியிருந்த குழியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பூக்குளம் சென்று பார்வையிட்டனர். அங்கு குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த குழியை தொழிலாளர்கள் உதவியுடன் மூடினர். மேலும் அப்பகுதியில் ஆபத்தான பகுதிகளைப் பார்வையிட்டு அவற்றில் தேவையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து கிராமத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில் குழந்தைகள் திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் குற்றங்கள் போன்றவையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கிராம மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பூக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் வி.ராஜேஸ்வரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு பணியாளர்கள் ஆர்.மகேஸ்வரன்,எம்.வசந்தகுமாரி ஆகியோர் பங்கேற்றனர்.