கறவை மாடு வாங்க கடன்வழங்கக் கோரிய மாற்றுத்திறனாளிபட்டதாரி இளைஞருக்கு ராமநாதபுரம் ஆட்சியர் உடனடியாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் அருகே மலையான்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாகு மகன் என்.சந்திரன்(27). இவர் பிறவியிலேயே இரு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி.
எழுந்து நடக்க முடியாமல் இருந்த நிலையில் சந்திரனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அவரது நண்பர் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்திருந்தார்.பின்னர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக சக்கர நாற்காலி மூலம் அவரை ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.
ஆட்சியரிடம் தான் ஒரு பி.லிட்.தமிழ் பட்டதாரி என்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் வீட்டில் இருந்து கொண்டே கறவை மாடு வாங்கி பிழைப்பு நடத்தும் வகையில் தனக்கு கறவை மாடு வாங்கிட ரூ.20 ஆயிரம் கடனாக வழங்கிடுமாறும் கோரிக்கை வைத்தார்.மேலும் தனது ஏழ்மை நிலையையும் ஆட்சியரிடம் விளக்கினார்.
சந்திரனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அவர் கேட்டுக்கொண்டபடி ரூ.20ஆயிரத்துக்கான காசோலையினை உடனடியாக தனது விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கினார்.தொகையினை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்ததுடன் கடனை முறையாக திருப்பி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.