கமுதி அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து 23 பவுன் நகையை கொள்ளையர்கள் செவ்வாய்கிழமை மாலை திருடிச் சென்றுள்ளனர்.
ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே அபிராமம் அடுத்துள்ள உடையநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஆறுமுகவள்ளி (34). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை வழக்கம்போல் கிருஷ்ணமூர்த்தியும், ஆறுமுகவள்ளியும் அருகில் உள்ள இவர்களது வயலுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு ஆறுமுகவள்ளி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 23 பவுன் தங்க நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அபிராமம் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.