குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன்.
குழந்தைகள் தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் அரசுக் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஆட்சியர் மேலும் பேசியது:
குழந்தைகளே வருங்கால இந்தியாவின் தூண்கள். எனவே குழந்தைகளிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மிகவும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.
படிக்கும் பருவத்தில் தன்னம்பிக்கையுடன் வாழவும், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டும் பாடங்களை நல்ல முறையில் படித்தும் வாழ்க்கையில் முன்னேறிட வேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறியது போல கனவுகளை நினைவாக்க நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார். இதனையடுத்து ஆட்சியருக்கு காப்பக குழந்தைகள் சிலர் ராக்கி கயிறு கட்டினர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேனி, சைல்டுலைன் அமைப்பின் இயக்குநர் எஸ். கருப்பசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.