ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழை காரணமாக சம்பை கிராமத்தில் உள்ள துவக்கப் பள்ளியின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட துவக்கபள்ளி ராமேசுவரம் சம்பை கிராமத்தில் உள்ளது. இந்த பள்ளியில் 63 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி சேதமடைந்துள்ளதாக கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பள்ளி கட்டடம் அருகே ரூ. 3 கோடி மதிப்பில் பள்ளிக்கூட வடிவமைப்பு கொண்ட பல்நோக்கு புகலிடக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இந்த கட்டத்தை பள்ளிக்கு பயன்படுத்த வேண்டும் என மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. இதே பகல் நேரத்தில் இடிந்திருந்ததால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என கிராமமக்கள் தெரிவித்தனர்.
மேலும் உடனே பள்ளி கட்டடத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.