கமுதி கணன்ணார்பட்டியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மீது ஆட்டோ மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
கமுதியை அடுத்துள்ள பெரிய உடப்பங்குளத்தைச் சேர்ந்தவர் சீனிநாயக்கர் மனைவி பாப்பா (55). இவரும் இவரது மகன் முனியசாமியும் ஒரு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை கமுதி சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணார்பட்டி அருப்புக்கோட்டை மும்முனை சந்திப்பில் வந்தபோது, மண்டலமாணிக்கத்தில் இருந்து வந்த ஆட்டோ மற்றும் சேதுராஜபுரத்தை சேர்ந்த ராஜ் மகன் அய்யனாரும் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், முனியசாமி வாகனம் என மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாப்பா, அவரது மகன் முனியசாமி, அய்யனார் ஆகிய மூவரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பாப்பா உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக முனியசாமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், அய்யனார் கமுதி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கமுதி போலிஸார் வழக்குப் பதிவு செய்து ம.புதுப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிச்சாமியை கைது செய்தனர்.