சர்வதேச கருத்தரங்கு: கீழக்கரை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சென்னை தரமணியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கேற்ற சர்வதேச கருத்தரங்கில் கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தியும், விவாதங்களில் பங்கேற்றனர். இவர்களை பள்ளியின் முதல்வர் செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.
சென்னை தரமணியில் உள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் கடந்த அக். 10 ஆம் தேதி முதல் 12 வரை சர்வதேச அளவில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், அமெரிக்கா, வடகொரியா, துபை, இங்கிலாந்து, கத்தார் உள்பட மொத்தம் 7 நாடுகளைச் சேர்ந்த 480 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாதிரி ஐக்கிய நாடுகள் சபை போல நடந்த இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டு ஜமைக்கா நாட்டின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதுடன் விவாதங்களிலும் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், கீழக்கரைக்கும் பெருமை சேர்த்தமைக்காக இவர்கள் 8 பேருக்கும் அவர்கள் படிக்கும் கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
இது குறித்து அப்பள்ளி முதல்வர் ராஜேஷ் கிருஷ்ணன் கூறியது: எமது பள்ளியில் பயிலும் ஹசன் நசீர், முஹம்மது ரிஹாப், முஹம்மது சாரிம் ஹூசேன், சதக் உஸ்ஸாம், சுமையா, பாத்திமா ஷாபியா, அனபா பாத்திமா, அனாக்கா பாத்திமா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் ஆயுதக்குறைப்பு, சர்வதேசப் பாதுகாப்பு, மனித உரிமைகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுசபைக் கூட்டம் ஆகிய தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.சிரியா அகதிகள் குறித்த சிறப்பு விவாதமும் நடைபெற்றது என்றார்.