டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருக்கும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் மேலும் கூறியது:
ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை உள்பட மாவட்டம் முழுவதும் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருக்கும் இடங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.சிங்காரத்தோப்பில் புதிதாக கட்டடம் கட்டி வரும் இரு இடங்களில் தேக்கி வைத்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலுக்கான கொசுப்புழுக்கள் வளர்வதை கண்டறிந்தனர். இதையடுத்து கட்டடம் கட்டும் இருவரிடமும் நகராட்சி சார்பில் தலா ரூ.1500 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் வகையில் கொசுப்புழு உற்பத்தியாக ஏதுவாக தண்ணீரை மூடிவைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருக்கும் நபர்கள் மீது அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.