கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் அடிக்கடி அறுந்து விழும் மின் வயர்களை, கமுதி உபகோட்ட மின்வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை சீரமைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், குண்டுகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட மின் வயர்கள் சிறு காற்று, மழைக்கு கூட தாக்குப் பிடிக்காமல் சேதமடைந்து அடிக்கடி அறுந்து விழுந்து வந்தது. இது குறித்து கிராமப் பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர். இதுவரை 7 முறை மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அறுந்து விழும் மின் வயர்களால் தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெரும் ஆபத்தில் சிக்கும் நிலை இருந்தது. தற்போது, மழைக் காலம் என்பதால், மின் வாரிய உயர்அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தினமணியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வியாழக்கிழமை கமுதி உபகோட்ட மின்வாரிய அதிகாரிகள் குண்டுகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக மாற்றப்படாத மின் வயர்களை மாற்றி, புதிய மின் வயர்களை பொருத்தினர். இதனால், குண்டுகுளம் கிராமப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.