கமுதி அருகே ஒ.கரிசல்குளம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வடமாடு எருது கட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒ.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு எருது கட்டு விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற இவ்விழாவில், 26 காளைகளும், 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கப் பணம், சைக்கிள், குத்து விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த எருதுகட்டு விழாவை பார்வையிட, கமுதி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்து பார்வையிட்டனர்.