ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8-வது நாளாக வேலைநிறுத்தம் செய்து 2-வது நாளாக ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.
போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெ.சேகர் தலைமை வகித்தார். ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் எஸ். முருகேசன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.