ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், 3 மணி 40 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
ராமேசுவரத்திலிருந்து மாலை 5 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். ஆனால், பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் 58 கி.மீ.க்கும் அதிகமாக இருந்ததால், இந்த ரயில் ராமேசுவரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்குச் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் காத்திருந்தனர். சிலர், ரயில் நிலைய மேலாளரை சந்தித்து தாமதத்துக்கான விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
பாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, இரவு 8.40 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றதாக, ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.