தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததையடுத்து கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக
கருதப்படும் ஏப்ரல் 15 முதல் முதல் ஜூன் 15 வரையிலான 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைக்காலம் அமலுக்கு வந்ததையடுத்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை முதல் 13 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். மேலும் இந்த தடையானது, நாட்டுப்படகு, கரைவலை, மீனவர்களுக்கு பொருந்தாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோழியகுடி, நம்புதாளை, ஏர்வாடி,கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தடைக்காலத்தின் போது விசைப்படகு மீனவர்கள் படகுகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததையடுத்து, தடைகால நிவரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.