பரமக்குடி அருகே நென்மேனி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் மனைவி ராஜம்மாள் (63). இவர் தனது உறவினர்களுடன் மதுரை விமான நிலையம் சென்றுவிட்டு, மீண்டும் காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
எதிரே, ராமேசுவரத்திலிருந்து வாடிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் காரில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது, நென்மேனி அருகே எதிர்பாராதவிதமாக இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், பலத்த காயமடைந்த மூதாட்டி ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு கார்களிலும் வந்த 6 பேர் பலத்த காயமடைந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து, பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.