பாம்பன் ரயில் தூக்குப் பாலத் தூண்களின் உறுதித் தன்மை குறித்து தனியார் நிறுவனம் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் - ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. எனவே, புதிய பாலம் அமைக்க மத்திய ரயில்வே துறை திட்டமிட்டு, அதற்கான பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில்வே பாலங்களில் தலைமைப் பொறியாளர் தலைமையிலும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தனியார் நிறுவனங்களும் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றன. திங்கள்கிழமை வந்த தனியார் நிறுவனத்தின் ஆய்வுக் குழுவினர், பாம்பன் ரயில் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூண்களின் தரம், அந்தப் பகுதியின் கடல் நீரோட்டம் போன்றவற்றை நவீனக் கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர்.