பரமக்குடி அருகே சுந்தனேந்தல் கிராமப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், வியாழக்கிழமை கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், ராமேசுவரம் வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த டாக்டர் நிர்மலாஅஞ்சலி (30) தனது காரில் உறவினர்களுடன் ராமேசுவரத்துக்கு வந்துள்ளார். பார்த்திபனூரைக் கடந்து, பரமக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட சுந்தனேந்தல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த காரின் டயர் திடீரென வெடித்து, இவர்களது கார் மீது மோதியது. இதில், அஞ்சலி மற்றும் அவருடன் காரில் வந்த நாராயண் கர் பார்த் (52), ரவி (31), ஜெனிகா பார்த் (25) மற்றும் ஜெயாட்சனா பார்த் (52 )ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இவர்களுக்கு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிக்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து, பரமக்குடி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.