ராமநாதசுவாமி கோயில் முதல் அக்னி தீர்த்த கரை வரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க பழைய சாலை தோண்டப்பட்டது. ஆனால், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து பிரதான சாலை சன்னதி தெரு முதல் அக்னி தீர்த்தக்கரை வரை உள்ள சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பக்தர்களின் வசதிக்காக தார் சாலையை அகற்றி விட்டு புதிய பேவர் பிளாக் சாலை அமைக்க கடந்த வாரம் பழைய சாலை தோண்டப்பட்டது. ஆனால் பேவர் பிளாக் சாலையை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.இது குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், புதன்கிழமை இந்து மக்கள் கட்சியினர் தோண்டப்பட்ட சாலையை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சாலையை சீரமைக்கும் பணியை தொடங்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.