மு.க.ஸ்டாலின்-அழகிரி சண்டை புதியதல்ல: தமிழிசை சௌந்தரராஜன்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே நடக்கும் சண்டை ஒன்றும் புதிய கதை அல்ல. இதற்கும், பா.ஜ.க.வுக்கும்

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் இடையே நடக்கும் சண்டை ஒன்றும் புதிய கதை அல்ல. இதற்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்புமில்லை என, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அலைவாய்க்கரைவாடி கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தை தொடக்கி வைக்க வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடையே கூறியதாவது:
கருணாநிதி இல்லாத திமுகவுக்கு ஒரு சவால் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவில் குழப்பம் தொடங்கி இருக்கிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், மு.க. அழகிரிக்கும் நடக்கும் சண்டை ஒன்றும் புதிதல்ல. இவர்களது சண்டைக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்தத் தொடர்புமில்லை. தமிழகத்தில் எது நடந்தாலும் பா.ஜ.க.வைத் தான் குறை கூறுகின்றனர். தினகரனால் தமிழகத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. சுதந்திர தினத்தில் சுமார் 50 கோடி மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில், மாபெரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைக்கிறார். ஊழல் இல்லாத கட்சியாக பாஜக தேர்தலை சந்திக்கப் போகிறது. இந்த பயத்தில்தான் பாஜக மீது காங்கிரஸ் பல்வேறு அவதூறுகளை கூறி வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தாலும், ஊழல் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. ஊழல், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தமிழகத்தில் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றன என்றார்.
பேட்டியின்போது, பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர்கள் து. குப்புராமு, சுப. நாகராஜன், மாவட்டத் தலைவர் கே. முரளீதரன், மாவட்டச் செயலர் ஆத்ம. கார்த்திக், மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி மற்றும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com