இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 125-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 175-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி நாகையில் கடந்த 9 ஆம் தேதி 6 மாவட்ட மீனவ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், பிப். 16 ஆம் தேதி பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ராமேசுவரத்தில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதையொட்டி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை மீனவ சங்கப் பொதுச்செயலாளர் என்.ச.போஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவ சங்கத் தலைவர்கள் தேவதாஸ், ஜேசுராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.