ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
பரமக்குடி வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் முத்துக்குமார் (26). இவரது தந்தை வெளிநாட்டில் உள்ளார். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த இவர் உத்திரகோசமங்கை கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.
அரியனேந்தல் கிராமம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில்
போடப்பட்டிருந்த தடுப்பு வேலியை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரி பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றுள்ளன. இதில் நிலைதடுமாறிய முத்துக்குமார் இரு சக்கர வாகனத்துடன் பேருந்தின் மீது மோதியதில் தலை மற்றும் கால்களில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவ்விபத்தக் குறித்து பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.