ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள தர்மதாவள விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் இம்மாதம் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஆயிரவைசிய மக்களுக்குப் பாத்தியமான இக்கோயிலில் மூலவர் அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மூலவர் கோபுர பணிகளை இந்து சமய அறநிலையத்துறையின் தேவகோட்டை ஸ்தபதி வி.கிருஷ்ணன் தலைமையிலான தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன. 26 ஆம் தேதி காலையில் அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் உப்பூர் வெயிலுகந்த விநயாகர் ஆலய சிவாச்சாரியார் க.ரவிக்குமார் தலைமையில் தொடங்குகின்றன. இதனைத் தொடர்ந்து நவக்கிரகஹோமம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி ஹோமம் ஆகியன நடைபெறும். ஜன.27 ஆம் தேதி சோமபூஜை, சூர்ய பூஜை, தம்பதி பூஜை நடைபெறுகிறது.
ஜன. 28 ஆம் தேதி காலை மகா பூர்ணாகுதி தீபாராதனைகள் முடிந்த பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து தர்மதாவள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மதியம் அன்னதானமும் இரவு சுவாமி திருவீதிஉலாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர்.பா.மோகன், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் தலைமையிலான சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.