ராமநாதபுரம் அருகே புதன்கிழமை, இளைஞரை வெட்டிக் கொன்றுவிட்டு, கொலையாளி போலீஸில் சரணடைந்தார்.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக்கிளி மகன் சிவா (எ) சிவக்குமார் (22). இவர், அதே ஊரைச் சேர்ந்த வைத்தீஸ்வரன்(40) என்பவரது உறவி
னர் பெண்ணை காதல் திருமணம் செய்தாராம். இதனால், வைத்தீஸ்வரனுக்கும், சிவக்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த சிவக்குமார், கடந்த இரு நாள்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்தார். அவர், புதன்கிழமை காலை, தெற்கூர் முத்துமாரியம்மன் கோயில் அருகில் இருந்த பெட்டிக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைத்தீஸ்வரன், சிவக்குமாரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு, கேணிக்கரை போலீஸில் சரணடைந்தார்.
அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வைத்தீஸ்வரன் மீது ஏற்கெனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.