ராமாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடத்தப்பட்ட தனது அக்காள் மகளை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட பெரும்பேர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஆதிகேசவனின் மகன் ஏழுமலை (59). இவரது அக்காள் இந்திராணிக்கு மனநிலை சரியில்லாமல் போனதால் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவுக்கு பிரார்த்தனை செய்ய வந்துள்ளனர். இந்திராணி குணமடைய வேண்டும் எனில் ஏர்வாடியிலேயே தங்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டதால் ஏழுமலையும், இந்திராணி குடும்பத்தினரும் ஏர்வாடியில் தங்கியிருந்துள்ளனர். ஏர்வாடி தர்கா பகுதியில் ஒரு உணவகத்தில் ஏழுமலை கூலித் தொழிலாளாராகப் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்திராணியின் மகள் நர்மதாவை (26), காஞ்சிபுரத்தில் உள்ள சில பிரமுகர்களின் தூண்டுதலால் ஏர்வாடியை சேர்ந்த சிலர் சொத்துப் பிரச்னைக்காக கடத்திச் சென்றனராம். இது தொடர்பாக பல முறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஏழுமலை மனு கொடுத்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது அக்காள் மகளை கண்டு பிடித்துத் தருமாறு ராமநாதபுரம் ஆட்சியரிடம் மீண்டும் மனுக் கொடுக்க வந்திருந்த ஏழுமலை, திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையறிந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சார்பு-ஆய்வாளர் வெள்ளை கணேச பாண்டியன் ஏழுமலையை மீட்டு கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.