தூய்மை இந்தியா திட்டம் குறித்து சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 48 ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சாவித்ரியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கென்சிலீமா அமாலினி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.