காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆரோக்கிய மன்றம், உடற்கல்வி மற்றும் சுகாதார அறிவியல் துறை சார்பில், ஆசிரியர், அலுவலர்களுக்கான ஆரோக்கியம் குறித்த சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில், துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினார். நலம் அகம்-புறம் என்ற தலைப்பில், சென்னை சித்த மருத்துவர் கு. சிவராமன் பேசியதாவது: அறிவியல் முன்னேற்றம், நவீன மருத்துவ வசதிகள், பொது சுகாதார வளர்ச்சி ஆகியவற்றால் மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டு கூடியுள்ளது. தொற்று நோய்களால் ஏற்படும் அழிவுகள் குறைந்துள்ளன. தொற்று நோய்கள் பரவாமல் ஒரு பக்கம் கட்டுப்படுத்தினாலும், தொற்றாத வாழ்வியல் நோய்களால் மக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.
அதற்கு, நமது உணவு வகைகள், வணிக வன்முறைகள், சுற்றுச்சூழல் ஆகியவையே முக்கியமானக் காரணங்களாகும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களிலும் துரித உணவு வகைகளிலும் ரசாயனக் கலவையை அதிகம் சேர்ப்பதால், மக்கள் புதிய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நமது மரபு சார்ந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். நமது நலத்தை நமது அக்கறையால் மட்டுமே காத்துக் கொள்ளமுடியும் என்றார். தொடர்ந்து, அவர் பிற்பகலிலும் மாணவர்களிடையே பேசினார். இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. பாலச்சந்திரன், ஆட்சிக் குழு உறுப்பினர் அ. நாராயணமூர்த்தி, உடற்கல்வி மற்றும் சுகாதார அறிவியல் துறைத் தலைவர் க. பாலசுப்பிரமணியன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.