சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் வரும் ஏப்.24 திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், நவக்கிரக பூஜையோடு தொடங்கி மே 1 ஆம் தேதி மூலவர் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயசந்திரன் முன்னிலை வகித்தார். இதில், விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான, குடிநீர், போக்குவரத்து, பாதுகாப்பு, தரிசனத்திற்கான நேரம் ஆகியவை பொதுமக்களுக்கு தொய்வின்றி கிடைத்திட செய்யும் வகையில் ஆலோசனை நடைபெற்றது.
சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன்,காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி,வருவாய் அலுவலர் து.இளங்கோ, தேவகோட்டை சார்- ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ்,கோவில் அலுவலர்கள்,விழா குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.